Site icon Nangooram

பிறவா வரம் தரும் காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும் தெரியுமா?

காசி, ராமேஸ்வரம் என்றதுமே, அது வயதானப் பின் செல்ல வேண்டிய இடம் என்பது பொதுவாக பெரும்பாலான மக்களின் எண்ணம். வாழ்க்கையில் தங்களின் கடமைகளை நிறைவேற்றியவர்கள், இதற்கு மேல் தங்களுக்கு வாழ்க்கையில் எதுவும் இல்லை என்று காசி, ராமேஸ்வரப் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.

ஆனால் இந்த கடமைகளை முடித்தவர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற நியதி ஏதுமில்லை. காசியும், ராமேஸ்வரமும் ஆன்மிக அதிர்வலைகள் அதிகமுள்ள திருத்தலங்கள். இன்றைக்கும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அனைத்து வயதினரையும் காசி, ராமேஸ்வர தளங்களில் பார்க்க முடியும்.

காசி என்பது முக்தி தலமாக போற்றப்படுகிறது. பிறவா வரம் வேண்டி இறைவனின் திருத்தலங்களை நாடிச் செல்லும் பக்தர்கள், புண்ணிய நதியான கங்கையில் நீராடி விட்டு, முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து வேண்டுதல் செய்வர். காசியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி பரிபூரணமாக கிட்டும் என்பது நமது இந்து மத நம்பிக்கை. இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் ஓடும் கங்கையில் நீராடினால், நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

கங்கையில் நீராடிவிட்டு பாபங்கள் நீங்கி புது மனிதனாக பிறப்பெடுக்கும் போது, மீண்டும் இவ்வுலக சுக போகங்களில் பற்று கொண்டு  விடக் கூடாது. மீண்டும் அழியும் பொருளின் மீதும் அதிகப் பற்றோ அல்லது விருப்பமோ வந்துவிடக் கூடாது. இனி இறைவன் ஒருவனே கதி என மனதில் தியானித்து இருக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் தான், பழையவைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்துவிட வேண்டும்  என்றார்கள்.

எந்த ஒரு பொருளின் மீதும் அதிக ஆசையோ, பற்றோ வைக்காமல் வாழப் பழகுபவனுக்கு, ஆணவமும், அகம்பாவமும் தானாகவே அழிந்து விடும். இதன் பொருட்டு தான் காசிக்குச் சென்றால், அழியும் பொருட்களின் மீது தங்களுடைய பிடிப்பை விட்டுவிட்டு வர வேண்டும் என்பார்கள். இதுவே நாளடைவில் காசிக்குச் சென்றால் எதையாவது விட்டு வர வேண்டும் என்று மாறியது.

விட வேண்டியது பிடித்த உணவுகளையோ அல்லது காய் கனிகளையோ மட்டுமல்ல. காமக்குரோத மனமாச்சர்யங்களை அக அழுக்குகளை விட்டு வந்து மீண்டும் பிறவாத பெரும் வரம் பெறுவோம்.

Customize Text: Font Color:
Exit mobile version