Site icon Nangooram

“புதுக்கோட்டை மாநகரை துர்நாற்ற நகரமாக மாற்றியது திராவிட மாடல் அரசின் சாதனை!” — பாஜக மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் குற்றச்சாட்டு

கடந்த நாலரை ஆண்டு காலமாக ஆட்சி செய்து வரும் திமுக அரசு, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டு வந்த நலத்திட்டங்கள் என்னென்ன என்பதை அமைச்சர்கள் விளக்க வேண்டும். தேர்வு நிலை நகராட்சியாக இருந்த புதுக்கோட்டையை மாநகராட்சியாக தரம் உயர்த்தி சொத்து வரி என்ற பெயரால் மக்களின் வரிப்பணத்தை சுரண்டி கொள்ளை அடிப்பது தான் திராவிட மாடல் அரசா?.

ஆங்கிலேயர்கள் வியந்து பார்த்த நகரங்களில் தொண்டைமான் மன்னர்களால் வடிவமைக்கப்பட்ட புதுக்கோட்டை நகரமும் ஒன்று. அத்தகைய புதுக்கோட்டையை இன்று துர்நாற்றம் வீசும் மாநகரமாக ஆக்கியதுதான் திராவிட மாடல் அரசின் சாதனை.

எப்பொழுதும் மத்திய அரசை குறை கூறிக் கொண்டிருக்கும் இயற்கை வளங்கள் நலத்துறை அமைச்சர் குடி கொண்டிருக்கும் வீட்டின் பின்புறமே திறந்த வெளியில் மலம் கழிக்கும் இடமாக உள்ளது வேதனைக்குரியதாக உள்ளது.

மன்னர்கள் காலத்தில் நகர் பகுதியில் வடிவமைக்கப்பட்ட கழிவு நீர் செல்லும் வாய்க்கால்கள் இன்று திறந்தவெளியில் மலம் தேங்கி நிற்கும் சாக்கடையாக அவல நிலையில் உள்ளது. சொத்து வரி உயர்த்தி மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து வரும் திராவிட மாடல் அரசு, மத்திய அரசின் தூய்மை பாரத திட்டத்தை ஏளனமாக பேசுவது வேடிக்கையாக உள்ளது.
புதுக்கோட்டை மாநகர பகுதியில் மன்னர்கள் வடிவமைத்த 16 வீதிகளில் வீட்டின் பின்புறம் தேங்கி, சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வரும் சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடி தண்ணீர் பிரச்சனை, சரியான சாலை வசதி இல்லாமை, பேருந்து நிலையத்தின் அருகே உள்ள பூங்கா பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடப்பது, குரங்கு தொல்லை, தெரு நாய்கள் தொல்லை, இரவு நேரங்களில் கால்நடைகள் சாலையில் படுத்து கிடப்பது போன்ற பல்வேறு மாநகராட்சி பிரச்சனைகளை சரி செய்யாமல் புதுக்கோட்டை திமுக மாநகர பொறுப்பாளர் நியமன பிரச்சனையிலேயே ஆளும் தரப்பினர் நேரத்தை வீணடித்து வருகின்றனர்.

தூய்மையான மாநகரட்சியாக தான் உள்ளது என ஆளும் தி.முக அரசு பொய்யுரைத்தால், திறந்த வெளியில மலம் கழிக்காத இடத்தை காட்ட தயாரா ? அமைச்சர் வீட்டு பின்புறத்தையே சுத்தம் செய்ய திராணியற்ற தி.மு.க அரசை மக்களை ஒரணியில் திரட்டி வீட்டுக்கு விரட்டுவோம்.

திமுக அரசு ஆட்சி அமைத்தவுடன் மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து, இரண்டு ஆண்டுகளுக்கு பின் 40% மகளிர்க்கு மட்டும் வழங்கிவிட்டு 60% மகளிரை ஏமாற்றிய திமுக அரசு தற்பொழுது ஆட்சிக்கு ஆறு மாத காலமே உள்ள நிலையில் தோல்வி பயம் ஏற்பட்டு, வீடு தேடி பெண்களிடம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தருகிறோம்.. விண்ணப்பங்கள் தாருங்கள்! தாருங்கள்! என மன்றாடுவது வேடிக்கையாக உள்ளது.

மேலும் நான்கரை ஆண்டு காலம் மகளிரை ஏமாற்றிய திமுக அரசு தற்போது ஆறு மாதம் உள்ள நிலையில் ஊக்கத்தொகை தருகிறேன் உரிமைத் தொகை தருகிறேன் எனப் பொய் உரைத்து மீண்டும் அவர்களை ஏமாற்ற நினைக்கின்றனர். ஆகவே, ஓரணியில் (மகளிர்) பெண்களை திரட்டி திமுக அரசை விரட்டிடுவோம்

Customize Text: Font Color:
Exit mobile version