Nangooram

காக்கும் கரங்கள் காவல்துறைக்கே அரிவாள் வெட்டு! அத்துமீறிய சிறுவனுக்கு துப்பாக்கிச் சூடு!

திருநெல்வேலியில் காவல்துறையினரை அரிவாளால் வெட்டிய சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் பற்றி காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.. அதில், திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி காலனி, சமத்துவபுரத்தைச் சேர்ந்த சண்முக சுந்தரம்,இவருடைய மகன் சக்திகுமார் (வயது 22). இவர் தற்போது ரஸ்தாவூர் என்ற பகுதியில் குடியிருந்து வந்துள்ளார்.

நேற்றிரவு பாப்பாக்குடி கிராமத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள், சக்திகுமாரை வரவழைத்து, நாங்கள் செய்யும் சட்டத்துக்கு புறம்பான செயல் மற்றும் ரவுடித்தனம் குறித்து காவல்துறைக்கு எப்படி தெரிவிக்கலாம் என கேட்டு,அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சக்திகுமார், தன்னை காப்பாற்றிக் கொள்ள இரத்தம் சொட்ட, சொட்ட அங்குள்ள ஒரு வீட்டிற்குள் சென்று தஞ்சம் அடைந்துவிட்டார்.

இதனால் சக்திகுமாரைத் தேடி சிறுவர்கள் இருவரும் கையில் அரிவாளுடன் அலைந்து இது ரெண்டு தேடியுள்ளனர். அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர்களான ரஞ்சித் மற்றும் முருகன், இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். அப்போது அரிவாளுடன் ஓடிய 2 சிறுவர்களை காவல்துறையினர் விரட்டிய போது, காவலர்களையும் சிறுவர்கள் அரிவாளால் வெட்டினர். இதில் சிறப்புப் படை காவலர் ரஞ்சித்துக்கு காலில் காயம் ஏற்பட்டது.

எனவே, தங்களை தற்காத்துக்கொள்ள காவலர்கள் இருவரும் ஒரு வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டனர். அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்த சிறுவர்கள், அந்த வீட்டின் கதவை உடைக்க முயற்சித்துள்ளனர். இதனால் தாங்கள் தஞ்சம் புகுந்த வீட்டிலிருந்த பெண் மற்றும் குழந்தைகளையும் காப்பாற்றும் நோக்கில் காவல்துறையினர் கதவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு சிறுவனுக்கு மார்பில் காயம் ஏற்பட்டதில் அங்கேயே விழுந்துள்ளான். மற்றொரு சிறுவனோ துப்பாக்கி சத்தம் கேட்டதும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.

இதனைத் தொடர்ந்து, காயமடைந்த சிறுவன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தப்பியோடிய மற்றொரு சிறுவனும் பிடிபட்டுள்ளான். சிறுவர்கள் தாக்கியதில் காயமடைந்த காவலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விசாரணையில், ஏற்கனவே இந்த சிறுவர்கள் மீது பாப்பாக்குடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அவர்கள் மீது காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தது, பெண்ணை அவதூறாக பேசியது, பெண் வன்கொடுமை உள்பட 11 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது போன்ற குற்றச்சம்பவங்களை உற்று நோக்கும் போது, குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல், பொது மக்களை பாதுகாக்கும் காவல் தெய்வமாக காவல்துறையினர் இருந்து வருகின்றனர். இப்படி பாதுகாக்கும் காவலர்களையே வெட்டும் அளவிற்கு சிறுவர்களின் மனநிலை சீர்கெட்டு விட்டது என்பது உறுதிபடத் தெரிகிறது. இதற்கு தமிழக அரசு சட்டம், ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினருக்கு முழு அதிகாரத்தையும், அங்கீகாரத்தையும் கொடுத்தால் மட்டுமே தமிழகத்தில் சீர்கெட்டு அலையும் மனித மிருகங்களிடம் இருந்து பொதுமக்களையும் நம் நாட்டையும் பாதுகாக்க முடியும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Customize Text: Font Color:
Exit mobile version