அரசுப் பணியில் இருந்து கொண்டு ஆரணியில் 5000 ரூபாய் அபேஸ்! பணித்தள அலுவலரும், ஊராட்சி செயலாளரும் செய்த ஊழல் அம்பலம்! நடவடிக்கை எடுப்பாரா கோட்டாட்சியர்?
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே இருதய அறுவை சிகிச்சைக்கு சென்ற மூதாட்டி, 100 நாள் வேலைக்கு வந்தது போல் கணக்கு காட்டி பணிதள பொறுப்பாளரும், அவருக்கு உடந்தையாக ஊராட்சி செயலாளரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கோட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.
வெட்டியாந்தொழுவம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஜோதி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சமயத்தில், அவர் 100 நாள் வேலைக்கு வந்தது போல் பணிதள பொறுப்பாளர் ரேணுகா பதிவேட்டில் வேலைக்கு வராத மூதாட்டி வந்தது போல் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்துள்ளார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய மூதாட்டியிடம், வேலைக்கே வராமல் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்பட்டதாகவும், 500 ரூபாயை எடுத்துக் கொண்டு மீதி 4600 ரூபாயை தருமாறு மிரட்டிப் பணம் பறித்ததாக கூறப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட சம்பவத்தின் அடிப்படையில்,அவரவர் பணிகளுக்கு தகுந்த ஊதியத்தை அரசு சம்பளமாக கொடுத்துக் கொண்டிருக்கும் போதே தன் உழைப்பை கொடுக்காமல் அடுத்தவர்கள் உழைப்பை கொடுத்தது போல் செய்யாத வேலையை செய்தது போல் திருட்டு கணக்கு காட்டி அரசு பணத்தை கொள்ளையடிக்கும் பணிதள பொறுப்பாளர் ரேணுகா மற்றும் ஊராட்சி செயலாளர் இருவரையும் கோட்டாட்சியர் அவர்கள் பணிநீக்கம் செய்து உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

