Site icon Nangooram

தமிழ்நாடு அரசு பள்ளி துறையின் கீழ் விலையில்லா நோட்டு, புத்தகம், சைக்கிள் வாங்க ஆதார் அவசியம் என அரசு அறிக்கை!

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், பயனாளிகள் ஆதார் வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் விலையில்லா நோட்டு புத்தகம், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நலத்திட்டங்களின் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, இந்த திட்டப் பலன்களைப் பெறும் பயனாளிகள், ஆதார் எண்ணை வைத்திருக்க வேண்டும். அல்லது ஆதார் அங்கீகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக, பயனாளிகள் நலத் திட்டங்களுக்காக விண்ணப்பிக்கும் முன்னதாக, ஆதார் எண்ணைப் பெற வேண்டும். இதற்கு, அருகில் உள்ள ஆதார் மையத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது திட்டத்தை செயல்படுத்தும் துறைகள், பயனாளி ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளை செய்து கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆதார் எண்ணைப் பெறும் வரை, விண்ணப்பித்ததற்கான அடையாளச் சான்று அல்லது புகைப்படத்துடன் கூடிய வங்கிப் புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, கிசான் அட்டை, ஓட்டுநர் உரிமம், தாசில்தார் அல்லது சான்றொப்பமிடும் தகுதியான அதிகாரிகள் அளிக்கும் புகைப்படத்துடன் கூடிய கடிதம், ஏதேனும் துறையில் இருந்து வழங்கப்பட்ட சான்று ஆகியவற்றில் ஒன்றை அளிக்கலாம்.

ஆதார் அங்கீகாரம் பெறும்போது, விரல் ரேகை பதிவில் சிக்கல் ஏற்பட்டால்,‘ முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் அங்கீகாரம் பெறலாம். அல்லது ஒருமுறை கடவுச்சொல் மூலம் அங்கீகாரம் பெறலாம். அதுவும் சாத்தியப்படாவிட்டால், ஆதார் அட்டையில் உள்ள க்யூஆர் கோடு மூலம் உறுதி செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Customize Text: Font Color:
Exit mobile version