விவசாயிகளின் பரிதாப நிலை! எள்ளுக்கு குறைந்தபட்ச விலை கூட கிடைக்காத அவலநிலை!

by ஆசிரியர்


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம்.

விவசாயிகள் கடும் கோபத்துடன் சாலை மறியல் கண்டனப் போராட்டம்!

மக்கள் போராடினால் அதிகாரம் கை மாறும் என்பதை இப்போராட்டம் உணர்த்துகிறது.

உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளுடன் கள்ளக்கூட்டு சேர்ந்து, குறைந்த பட்ச ஆதார விலைக்கும்
(MSP) குறைவாக விலை நிர்ணயம் செய்த ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை மண்டியிட வைத்த பென்னாகரம் எள் விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம்!

வானம் பார்த்த பூமி என்றாலும் எண்ணெய் வித்துக்களான எள், கடலை மற்றும் சிறுதானிய உற்பத்தியில் தமிழகத்திலேயே முதலிடம் வகிப்பது தருமபுரி மாவட்டம் ஆகும். வகை வகையான எண்ணெய் பிராண்டுகள் உள்ளன. அதை உற்பத்தி செய்கிற விவசாயிகளின் துயரம் இன்று பென்னாகரத்தில் போராட்டமாக வெடித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள  வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை தருமபுரி விற்பனை குழுவின் கீழ் உள்ள பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனைகூட அதிகாரிகள், பென்னாகரம் சுற்றுவட்டார எள் மற்றும் பருத்தி விவசாயிகளிடம் நடப்பு ஆண்டு 2025- 2026 -கான எள் மற்றும் பருத்தி ஏலம் 16-07-2025 அன்று நடைபெறும் என்றும் இதற்கு நல்ல விலை கிடைக்க எள்ளை காயவைத்து சுத்தப்படுத்தி எடுத்து வரவேண்டும் என்றும் பிரசுரம் அச்சடித்து கொடுத்து அழைப்பு விடுத்ததோடு வாய் வழியாக எள் கிலோ ரூ 120 ற்கு விற்பனை செய்யலாம் என கூறிச் சென்றனர்.

இதை நம்பி பென்னாகரம் சுற்றவட்டார பகுதி எள் விவசாயிகள் சுமார் 400 பேர் வரை சராசரியாக 200 கிலோ, 300 கிலோ என்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தனர்.. அதே நேரத்தில் ஏலம் எடுப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் சுமார் பத்து பேர் வந்திருந்தனர். குறிப்பாக வாரி, எம்ஆர்ஜி, ஜேவிஎஸ், குமரன், மாருதி, ஏஎஸ்ஆர்,  உள்ளிட்ட வியாபாரிகள்.

காலையில் விவசாயிகள் அனைவருக்கும் வரிசை பிரகாரம் டோக்கன் கொடுத்தனர். காலையிலிருந்து காத்திருந்த விவசாயிகளுக்கு மாலை நான்கு மணிக்குத்தான் விலை நிர்ணயம் அறிவிக்கப்பட்டது. அறிவித்த விலை அனைத்து விவசாயிகளுக்கும் கட்டுபடியானதாக இல்லை. குறிப்பாக எம்எஸ்பியை விட குறைவானதாகவே இருந்தது. குறிப்பாக ஒரு கிலோ ரூ 70, ரூ 80 என்று தரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் திடீரென பென்னாகரம்-தருமபுரி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரை மணி நேரம் கழித்தே பென்னாகரம் தாசில்தார், ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். அவர்களோடு காவல்துறையும் வந்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்ற மறியலில்  விவசாயிகள் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்தனர். அடிக்காதே அடிக்காதே விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே! ஏமாற்றாதே ஏமாற்றாதே விவசாயிகளை ஏமாற்றாதே என்றும். கட்டுபடியான விலை கிடைக்கும்வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றும் முழுக்கமிட்டனர். வெளிசந்தையில் ரூ 120 வரை எள் விலை போகும்போது ஏன் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்தளவு எம்எஸ்பியை விட குறைவான விலைக்கு போகிறது. இது உள்ளூர் வியபாரிகளோடு கூட்டு சேர்ந்து அதிகாரிகள் நடத்தும் மோசடி என்று விவசாயிகள் ஆதங்கத்தோடு தெரிவித்தனர். இந்த அற்ப விலைக்குத்தான் காலையிலிருந்து சாப்பாடு தண்ணி இல்லாம காத்துக்கிடந்தோமா?என்று பெண் விவசாயிகள் ஆதங்கத்தோடு தெரிவித்தனர். ஆகவே எம்எஸ்பியை விட கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போதுதான் ஏற்றுக்கொள்வோம் என்று உறுதியாக போராட்டத்தை தொடர்ந்தனர்.
போராட்டத்தினூடாக பல பிராண்டுகளில் எண்ணெய் கலப்படம் வருகிறது. விவசாயிகளான நாங்களா கலப்படம் செய்கிறோம். பல பிராண்டுகளில் முதலாளிகள் கலப்படம் கலந்து அதற்கு இந்திய அரசும் அனுமதி கொடுக்கப்படுகிறது, என்று ஆதங்கத்தோடு கூறினர். இடைத்தரகர்கள் விலை நிர்ணயம் செய்வதுதான் விலை என்றால் அவர்களை விவசாயம் செய்ய சொல்லுங்கள் என்று தனது வர்க்கத்தின் ஆத்திரத்தை கேள்வியாக எழுப்பினர்.

இறுதியாக டிஎஸ்பி, தாசில்தார், விற்பனை அதிகாரிகள்  முதலியோர் முன்னிலையில் இப்போது அளந்து எடை போட்டு பில் கொடுப்பதாகவும், வரும் திங்கள் கிழமை மறு ஏலம் விடப்படும் என்றும் அப்போது (குறைந்த பட்ச ஆதாரவிலை ரூ 97) எம்எஸ்பி ரேட்டிற்கு எள் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று உத்திரவாதம் கொடுத்த அடிப்படையில் போராட்டத்தை தற்காலிகமாக பின்வாங்கி உள்ளனர். அதன்படி விவசாயிகளுக்கு எடை போட்டு பில் கொடுக்கப்பட்டன.

ஒழுங்குமுறை விற்பனை கூடம் என்று பெயர் வைத்துக்கொண்டு விவசாயிகளின் வயிற்றில் அடித்து இடைத்தரகர்கள் – வியபாரிகளோடு கள்ளக்கூட்டு வைத்து அவர்களிடம் கமிஷன் பெற்று பிழைப்பு நடத்துவதுதான் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் வேலை.

இதுதான் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் வேலை. மூன்று வேளாண் சட்டம் வந்தால் குறைந்தபட்ச ஆதாரவிலை இல்லாமல் போகும் என்று கூறி 700 விவசாயிகள் தன் இன்னுயிரை ஈந்து வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி மூன்று வேளாண் சட்டத்தை திறும்ப பெறவைத்தனர். ஆனால், இந்த சட்டத்தை எதிர்ப்பதாக கூறும் மக்கள் போராடினால் அதிகாரம் கை மாறும் என்பதை இப்போராட்டம் உணர்த்துகிறது.

தமிழக அரசின் கீழ் இயங்கும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையானது இடைத்தரகர்களுக்கு மாமா வேலை பார்க்கிறது.

விவசாயிகள் முட்டாள்கள், அவர்களை ஏமாற்றிவிடலாம்” என்று கருதிய அதிகாரிகளை மண்டியிடவைத்தனர் பென்னாகரம் எள் விவசாயிகள். காவல்துறையினர் வந்த போதும் அச்சப்படாமல் சம்மந்தபட்ட அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என்று உறுதியாக போராடியது விவசாய வர்க்கத்தின் உறுதியைக் காட்டுகிறது. மக்கள் போராடினால் அதிகாரம் கை மாறும் என்பதை இப்போராட்டம் உணர்த்துகிறது.

Customize Text: Font Color:

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00