கோவில் கருவறை என்பது இந்து கோவில்களில், முதன்மைக் கடவுளின் சிலை வைக்கப்பட்டுள்ள இடமாகும். இது கோவிலின் பிரதான பகுதியாக கருதப்படுகிறது. கருவறை பொதுவாக இருட்டாக இருக்கும். கருவறை, சமஸ்கிருதத்தில் “கர்ப்பக்கிரகம்”என்று அழைக்கப்படுகிறது, இதன் பொருள் “கரு அறை” என்பதாகும். இது கோவிலின் மிக முக்கியமான இடம் மற்றும் கடவுளின் உருவம் அங்குதான் வைக்கப்படுகிறது.
கருவறையை திரை போட்டு மூடி இருக்கும்போது இறை ஆற்றல்கள் தேங்கிநிற்கும். திரை விலக்கப்பட்டு தீபம் காட்டப்பட்டதும், அந்த ஆற்றல்கள் அப்படியே திரண்டு வந்து வெளியில் இரு பக்கமும் வரிசையில் நிற்பவர்கள் மீது அருள் வெள்ளமாக பாயும்.
இந்த இறை ஆற்றல்கள், அலைகள் நமது மூளையை சுத்தப்படுத்தி நம்மை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.இதை கருத்தில் கொண்டு தான் சித்த சுவாதீனம் அடைந்தவர்களை கோவில் வளாகத்தில் கட்டி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
கோவிலில் தயாரிக்கப்படும் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேக நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் காந்த அலைகளே காரணமாகும்.
கருவறையில் உருவாகும் சக்தியானது இடமிருந்து வலமாக சுற்றுப்பாதையில் சுற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதை கண்டுபிடித்து கருவறையை இடமிருந்து வலமாக நம்மை சுற்ற வைத்து விட்டனர்.
ஆண்கள் மேல் சட்டை அணியாமல் சுற்றினால் சக்தி அலைகள் நேரடியாக உடலுக்குள் புகுந்து நல்லது செய்யும்.
பொதுவாக கருவறை மூலவர் மூலம் ஆலயம் முழுவதும் காந்த சக்தி அலைகள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மிக அதிகமாக பரவும். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் சென்று முதல் ஆராதனையின் போது வழிபட்டால் அதிக நன்மை பெறலாம்.
இந்த காந்த அலைகள்தான் கோவிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றை கருவறையுடன் ‘‘வயர்லஸ்’’ தொடர்பு போல இணைக்கின்றன. எனவே ‘‘பாசிட்டிவ் எனர்ஜி’’ பெற கருவறை வழிபாடு மிக, மிக முக்கியமானது.
வெளியே வெயில் உள்ளே குளிர்ச்சி
கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. இதன் கர்ப்பகிரகம் சந்திரகாந்த கல்லால் ஆனது. இது தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப கர்ப்பகிரகத்தை மாற்றும். அதாவது வெளியே வெப்பமாக இருக்கும் போது கர்ப்பகிரகம் குளிர்ச்சியாக இருக்கும். வெளியே கடும் குளிராக இருந்தால் கர்ப்பகிரகத்தின் உள்பகுதி வெப்பமாக மாறிவிடும்.
நம் முன்னோர்கள் இப்படி பல ஆலய வழிபாட்டு முறைகளை ஆகம விதிப்படி அறிவியல் பூர்வமாக உருவாக்கி நமக்காக கொடுத்துள்ளார்கள் நாமும் ஆலயம் சென்று இறைவனின் அருள் பெற்று வளமுடன் வாழ்வோமாக!