வீண் விரயம் இல்லா நிலையும், தடையில்லா பொருள் வரவும், செல்வ செழிப்பும் ஏற்பட என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

by ஆசிரியர்

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பார்கள். பணமே வாழ்க்கையாகி விடுவதில்லை. ஆனால், பணம் இல்லாவிட்டால் வாழ்க்கை நடத்துவது சிரமம் என்பதே யதார்த்தம். எல்லோரும் பணத்தைத் தேடியே ஓடிக் கொண்டிருக்கிறோம்; அல்லும் பகலும் அயராது பாடுபடுகின்றோம்.ஆனாலும்,எல்லோர் கைகளிலும் பணம் அத்தனை எளிதாகக் கிடைத்து விடுவதில்லை. ஒருவேளை பணவரவு இருந்தாலும், வீண் செலவுகளும் தொடர்ந்து வந்து, பற்றாக் குறையைப் பரிசளித்து விடுகிறது!

வீண் விரயங்கள் இல்லாத நிலை உண்டாகவும், தடையில்லாத பொருள் வரவு செல்வச் செழிப்பு ஏற்படவும் வாஸ்து சொல்லும் வழிகாட்டல்களை இங்கு பார்ப்போம்.செல்வத்துக்கு அதிபதியான திருமகள் சகல செல்வங்களையும் எல்லோருக்காகவும் தான் கொட்டி வைத்திருக்கிறாள். ஆனால், அவளுடைய அருளால் அதை நாம் எப்படிப் பெறுவது என்பதில்தான் நமக்குக் குழப்பம்.

வீட்டின் தலைவாயிலைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.வாசலில் எப்போதும் மாக்கோலம் மிளிரட்டும். இப்படி, மங்கலகரமான தலைவாயிலைக் கொண்ட வீட்டில் நேர்மறை சக்தி நிறைந்திருக்கும்; லட்சுமி கடாட்சமும் பண வரவும் மிகுந்திருக்கும்.

உங்கள் வீடு எப்போதும் வெளிச்சமாக இருப்பது அவசியம். அதற்கேற்ப சன்னல்களை திறந்து வையுங்கள். வாரம் ஒருமுறை யேனும்,குறிப்பாக வெள்ளிக் கிழமைகளில் சாம்பிராணி, குங்குலிய தூபம் இடுவது விசேஷம். தூபத்தின் மணம் மகாலட்சுமியை வரவேற்கும் அம்சமாகும்.

ஒவ்வொரு இரவும், வீட்டின் வெளியே கற்பூரத்தை ஏற்றி வையுங்கள். இது வாஸ்து சாஸ்திரத்தின் படி எதிர்மறை சக்திகளை வெளியேற்ற உதவுகிறது.
அதிர்ஷ்டத்தையும் செல்வச் செழிப்பையும் அதிகரிப்பதில் ஸ்படிகக் கற்கள் முக்கியப் பங்கு ஆற்றுகின்றன. இயன்றால், உங்கள் வீட்டில் பூஜையறையில் ஸ்படிகக் கற்களை வைக்கலாம்.

குளியறை, சமையலறையில் தண்ணீர்க் குழாய்களில் நீர்கசிவு, நீர் விரயம் ஆகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். குளியறையில் எப்போதும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேமித்து வைப்பது நல்லது.வீட்டில் பணம் வைத்திருக்கும் பணப்பெட்டி மற்றும் பீரோ போன்றவற்றின் அமைவிடத்தையும் நாம் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும். வடமேற்கில் பீரோ, பணப்பெட்டி முதலியவை இருந்தால், பணம் வருவதும், போவதுமாக இருப்பதுடன், சேமிக்க முடியாததுடன் கடன்காரனாகவும் மாற்றித் துன்பப்பட வைக்கும்.

தென்கிழக்கில் பணப்பெட்டி இருக்குமேயானால், விரயச் செலவுகளையும், கொடுத்த பணம் திரும்பக் கிடைக்காத தன்மையையும் ஏற்படுத்தும். கிழக்கில் பீரோ இருக்குமாயின் பணம் பல வழிகளில் வந்தாலும், நோய்க்குச் செலவு செய்வதில் பெரும்பகுதியும், குழந்தைகளின் தவறான செயல்களினால் பெரும் தொகையுமாக வீண் செலவுகள் உண்டாகும்.

தெற்குப் பார்த்த வீட்டின் வடக்குச் சுவர் ஓரமாக, தெற்குப் பார்த்து பீரோ வைத்திருப்பவர்கள் வீட்டில், பெண்களுக்கு வைத்தியச் செலவு உண்டாக வாய்ப்பு உண்டு. மேற்குப் பார்த்த வீட்டுக்குக் கிழக்குச் சுவர் சார்ந்து, மேற்குப் பார்த்து பீரோ இருக்குமேயானால், ஆண்கள் தேவையற்ற வீண் செலவுகளைச் செய்வார்கள்.

கிழக்குப் பார்த்து பீரோவை வைத்தால், மகிழ்ச்சியான செலவுகளைத் தந்து, நிம்மதியையும் லாபத்தையும் தரும். செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். மங்கல காரியங்கள் மனையில் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். வீட்டின், தென்மேற்குச் சார்ந்த மூலையில் (நைருதி மூலை – குபேர மூலை) பீரோவை வைத்தால், பணம் எப்போதும் இருந்து கொண்டே இருப்பதுடன், பல தேவைகளைச் சிந்தித்து அதற்கேற்ப செலவுகளைச் செய்ய வைக்கும்.

வீட்டில் பூஜையறையில் வலம்புரிச் சங்கு வைத்திருப்பது சிறப்பு. இதனால் பல வகையிலும் வருவாய் அதிகரிக்கும்; பணம் பெருகும். அதேபோல், லட்சுமி குபேரர் படத்தை வைத்து வணங்கி வாருங்கள். எப்போதும் குபேரன் படத்துடன் மகா லட்சுமியின் படத்தையும் சேர்த்தே வணங்க வேண்டும்.

வியாபாரத்தில்,நாம் மேற்கொண்டுள்ள தொழிலில் லாபம் கிடைக்க வேண்டுமானால், குபேரனுக்குப் பாலாபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். குபேரனுக்கு உரிய நாள் வியாழக்கிழமை. அதுவும் பூச நட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை ரொம்பவே விசேஷம். அந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும்.

ஒருமுறையேனும் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையார்- உண்ணாமுலை அம்மனை வணங்குவதோடு, கிரிவலம் வரும்போது குபேர லிங்கத்தையும் வழிபட்டு வாருங்கள்,உங்கள் வாழ்வில் பொருளாதார கஷ்டம் எப்போதும் ஏற்படாது.

நாமும் அற்புதமான வாஸ்து சாஸ்திரத்தை பயன்படுத்தி பெரும் சம்பத்துடன் வாழ்வாங்கு வாழ்வோமாக!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00