ஆந்திரப் பிரதேச மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிக்கவோலு கிராமத்தில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி கணபதி கோயில், சுமார் 1400 ஆண்டுகள் பழமையானது. இது சாளுக்கியர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற ஒற்றைக் கல் விநாயகர் கோயிலாகும். கிழக்கு கோதாவரி மாவட்டத் தலைமையிடமான காக்கிநாடாவிலிருந்து 33 கி.மீ தொலைவிலும்,ராஜமகேந்திரவரத்திலிருந்து 40 கி.மீ தொலைவிலும் இக்கோயில் உள்ளது.
கோயிலின் சிறப்பம்சங்கள்
ஸ்வயம்பு திருவுருவம்: இந்தக் கோயிலில் உள்ள விநாயகர் சிலை ஸ்வயம்பு (தானாகத் தோன்றியது) என்று நம்பப்படுகிறது. இதன் தனிச்சிறப்பு என்னவென்றால், விநாயகரின் தும்பிக்கை வலதுபுறம் திரும்பியுள்ளது.
வளர்ந்து வரும் சிலை: இச்சிலை ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது 90 அங்குல உயரமும், 50 அங்குல அகலமும் கொண்டதாக இருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு தேங்காய் அளவு சிறியதாக இருந்த இச்சிலை, தற்போது 11 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. சிலையின் அடிப்பாகத்தின் ஆழம் இதுவரை அறியப்படவில்லை.
நீரூற்று: இறைவனின் இடது காலின் அடிப்பகுதியில் இருந்து நீர் வருவதைக் காணலாம்.
வரலாற்றுப் பின்னணி: கி.பி. 849 முதல் கி.பி. 892 வரையிலான காலகட்டத்தில் கிழக்கு சாளுக்கிய மன்னர்களால் இக்கோயில் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. பல போர்களில் வெற்றி பெற்ற மன்னன் குணக விஜயாதித்யா, போருக்கு முன்னும் பின்னும் இந்த தெய்வத்தை வழிபட்டுள்ளார்.
சிலையின் விவரங்கள் :
இந்த விநாயகர் சிலை ஒற்றைக் கல்லால் செதுக்கப்பட்ட விஜயானந்த கணபதி என்று அழைக்கப்படுகிறது.
கிழக்கு சாளுக்கிய சிற்ப வரலாற்றில், 11 அடி உயரம் கொண்ட இந்த விநாயகர் சிலை மிகப்பெரிய ஒன்றாகக் கருதப்படுகிறது.
குணக விஜயாதித்யா மன்னரின் முத்திரைகளில் காணப்படுவது போல, இச்சிலையின் வேலைப்பாடுகள் மிக அழகாக அமைந்துள்ளன. ஒருபுறம் விநாயகரையும் மறுபுறம் லட்சுமியையும் காட்டும் அந்த முத்திரை தற்போது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது.
கோயில் கண்டறியப்பட்ட வரலாறு
நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பக்தரின் கனவில் இறைவன் தோன்றி, தான் விவசாய நிலத்தின் அடியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அந்த பக்தர் கிராம மக்களுக்குத் தகவலைத் தெரிவிக்க, நிலத்தைத் தோண்டியபோது விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டு, அன்றிலிருந்து இக்கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. இந்தச் சிலை 1988 ஆம் ஆண்டு விவசாய நிலங்களில் கண்டெடுக்கப்பட்டது.
பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் :
அப்போதைய பூசாரி கோலபள்ளி சலபதி ராவ், 1988 ஆம் ஆண்டு முதல் பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஒவ்வொரு சுக்ல சதுர்த்தியன்றும் லட்ச பத்திரி பூஜை மற்றும் கணபதி ஹோமம் செய்து வந்தார். தற்போது அவரது குடும்பத்தினர் இந்தப் பூஜைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத பௌர்ணமிக்கு முன் வரும் சதுர்த்தி அன்று கணபதி ஹோமம் மற்றும் லட்ச பத்திரி பூஜை நடத்தப்படுகிறது.
விநாயக சதுர்த்தி மற்றும் மார்கழி சஷ்டியில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு சதுர்த்தி வரும் அமாவாசை அன்று அபிஷேகம் மற்றும் சண்டி ஹோமம் நடத்தப்படுகிறது.
இக்கோயிலில் கணபதி ஹோமம் செய்பவர்களுக்கு விநாயகப் பெருமான் செல்வ கடாட்சத்தை அருள்வதாகப் பக்தர்கள் நம்புகின்றனர்.
நவக்கிரக சிலைகள், ராஜ ராஜேஸ்வரி தேவி, சந்திரசேகர், நந்தி பார்வதி, கோலிங்கேஸ்வரர் மற்றும் சுப்ரமணியேஸ்வரர் சிலைகளும் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் விநாயக நவராத்திரியுடன் சுப்ரமணிய திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.
பக்தர்களின் நம்பிக்கை இங்குள்ள விநாயகரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்றும், தங்கள் வேண்டுதல்களை விநாயகரின் காதில் கிசுகிசுப்பதன் மூலம் அவை நிறைவேறும் என்றும் பக்தர்கள் ஆழமாக நம்புகின்றனர். இக்கோயில் நூற்றுக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
தரிசன நேரம்
காலை: 4:00 AM – 12:30 PM
மாலை: 4:00 PM – 8:00 PM
கோயிலை அடைவது எப்படி?
விமானம் மூலம் :
இக்கோயிலிலிருந்து 39 கி.மீ தொலைவில் ராஜமுந்திரி உள்நாட்டு விமான நிலையம் உள்ளது.
ரயில் மூலம் :
ராஜமுந்திரி மற்றும் காக்கிநாடா ரயில் நிலையங்கள் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளன.
ராஜமுந்திரி ரயில் நிலையத்திலிருந்து கோயில் 34 கி.மீ தொலைவில் உள்ளது.
காக்கிநாடா ரயில் நிலையத்திலிருந்து கோயில் 30 கி.மீ தொலைவில் உள்ளது.
சாலை வழியாக :
ராஜமுந்திரி மற்றும் காக்கிநாடா நிலையங்களிலிருந்து பிக்காவோலுவை சாலை வழியாக எளிதில் அடையலாம்.